Saturday, November 8, 2025

உலகின் முதல் ...


அவர் கணித்துச் சொன்னபடி காமெட் திரும்ப வந்தது. அதைக் காணத்தான் அவர் இல்லை. ஆம், Halley’s Comet. 1758-இல் அது வந்தது. 1456, 1531, 1607, 1682 இல் வந்ததெல்லாம் அதுவேதான் என்று சொன்னவரும் அவரேதான்.
Edmund Halley… இன்று பிறந்த நாள்!
1676. தூர திருஷ்டி கண்ணாடியைக் கொண்டு உலகின் வடபாதி வெளி மண்டலத்தின் அனைத்து நட்சத்திரங்களையும் இடம் குறித்து வைத்து விட்டனர். தென்பாதிக்கு பொறுப்பேற்றுக் கொண்டார் இவர். அப்பாவும் அரசரும் (King Charles II) உதவ, தென் அட்லாண்டிக் St Helena தீவைச் சென்றடைந்தவர், பருவநிலை சாதகமாக இல்லாத போதும் 341 நட்சத்திரங்களின் உருவ நிலையைக் குறித்துவிட்டே திரும்பினார். கிடைத்தது Royal Society மெம்பர்ஷிப்பும் Oxford இல் மாஸ்டர் டிகிரியும்.
எப்பவாச்சும் நினைச்சிருப்போமா.. சூரியனைச் சுத்தி வரும் கிரகங்கள் இடறி உள்ளே விழாமலும் பதறி வெளியேறி விடாமலும் செலுத்துவது எது? அதைச் செலுத்தும் விசை அப்பால் தள்ளிச் செல்லச் செல்ல உக்கிரம் குறையணும் இல்லையா? அது அவருக்கு தெரிந்திருந்தாலும் பாதையின் வடிவத்தை படம் பிடிக்க முடியவில்லை.
இப்பதான் ஸீனில் என்டர் ஆகிறார் ஐசக் நியூட்டன். கையில் அந்த ellipse பாதையை வரைந்து கொண்டு. போட்ட கணக்கை தொலைத்துக் கொண்டு.
‘அப்படியா? போடு போடு மறுபடி கணக்கை! எழுது எழுது தியரியை!’ என்று அவரைச் செலுத்தி உற்சாகமும் அச்சடிக்க உதவியும் செய்தார் ஹேலி. உருவானதுதான் ‘Principia’. நியூட்டனின் மாபெரும் படைப்பு.
ஒண்ணு தெரியுமா? உலகின் முதல் பருவக் காற்று வரை படத்தை 1686 இல் வரைந்தது இவருதான். அந்த அடையாளக் குறிகளை இன்னிக்கு வரை பயன்படுத்துகிறோம்.
வயசுக்கும் ஆயுசுக்கும் உள்ள தொடர்பை அட்டவணைப் படுத்தினதும் முதலில் இவரே. இன்ஷூரன்ஸுக்கு அது உதவிற்று. ஆழத் தண்ணீரில் இறங்கி நாலு மணி நேரம் வரை வேலை செய்ய உருவாக்கிய Diving Bell இல் தேம்ஸுக்குள் 60 அடி மூழ்கிக் காட்டியது ஆழ்ந்த அறிவைக் காட்டும்.

Friday, November 7, 2025

இரண்டு முறை...


’நோபல் பரிசைப் பெற்ற முதல் பெண்மணி
நோபல் பரிசை இரண்டு முறை பெற்ற ஒரே பெண்மணி
நோபல் பரிசை அறிவியலின் இரண்டு துறைகளில் பெற்ற ஒரே நபர்.
மேரி க்யூரி (Marie Curie)... இன்று பிறந்த நாள்!
‘ரேடியம் கண்டுபிடிக்கப்பட்ட போது அது மருத்துவமனைகளில் உபயோகமாகும் என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அறிவியலின் ஒரு வேலையாகவே அது நடந்தது. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை நேரடி உபயோகம் என்ற கோணத்தில் பார்க்கக் கூடாது. அறிவியலின் ஓர் அழகு என்று அதை உருவாக்க வேண்டும். பின்னர் அது மனித குலத்துக்கு பிரயோஜனமாக அமைந்துவிடலாம், ரேடியத்தைப் போல.’ என்றார்.
புகழினால் சற்றும் பாதிக்கப்படாத ஒரே பிரபல விஞ்ஞானி என்று ஐன்ஸ்டீன் வியந்த கியூரியஸ் பெண்மணியான க்யூரி சொன்னது: ‘என் வாழ்நாள் முழுவதும் இயற்கையின் இனிய தரிசனங்கள் என்னை ஓர் குழந்தையைப்போல குதூகலிக்கச் செய்துள்ளன.’
‘இந்த வாழ்வில் எந்த விஷயமும் பயப்படுவதற்கானது அல்ல; புரிந்து கொள்வதற்கானது.’
‘முன்னேற்றத்திற்கான பாதை விரைவானதுமல்ல; எளிதானதுமல்ல.’
‘அறிவியலில் விஷயங்களைப் பற்றி ஆர்வமே முக்கியம், நபர்களைப் பற்றிய ஆர்வம் அல்ல.’
‘எதுவரையில் நடந்துள்ளது என்று நான் பார்ப்பதில்லை, என்ன செய்ய வேண்டியது பாக்கி இருக்கிறது என்று மட்டுமே பார்க்கிறேன்.’
‘தனிமனிதரை முன்னேற்றாமல் நம்மால் இன்னும் சிறந்த ஓர் உலகை உருவாக்க முடியாது.’

மிகக் குறைந்த வயதில்...


மிகக் குறைந்த வயதில் நோபல் பரிசு வாங்கியவர். ஆம் 44 வயதில் இலக்கியத்துக்கான நோபல். 'அந்நியன்' என்ற பிரபல நாவலை எழுதியவர்.
ஆல்பர்ட் காம்யூ (Albert Camus)... இன்று பிறந்த நாள்.
சொன்னவை சுவையானவை...
‘ஆனந்தத்தில் என்ன அடங்கியிருக்கிறது என்று ஆராய்ந்தால் உன்னால் ஒரு போதும் ஆனந்தப்பட முடியாது, அதுபோல் வாழ்க்கையின் அர்த்தத்தை தேடிக்கொண்டிருந்தால் வாழ முடியாது.’
‘நட்பு பெரும்பாலும் காதலில் முடியும். ஆனால் காதல் ஒரு போதும் நட்பில் முடிவதில்லை.’
‘உண்மையைத் தேடுவது வேறு; பிடித்ததை தேடுவது வேறு.’
‘வாழ்வின் மேல் விரக்தி ஏற்படாமல் வாழ்வின் மேல் பிரியம் ஏற்படுவது இல்லை.’
‘உன் மகிழ்ச்சியை உனக்குள் கண்டுபிடி.’
‘எங்கே நம்பிக்கையற்று போகிறோமோ அங்கே அதை நாம் உருவாக்க வேண்டும்.’
'என் பின்னால் நடக்காதே. நான் வழிகாட்டப் போவதில்லை. என் முன்னே நடக்காதே. உன்னை நான் தொடரப் போவதில்லை. பக்கத்தில் நட, ஒரு நண்பனாக!'
‘வளைந்து கொடுக்க முடிகிற இதயங்கள் வரம் பெற்றவை. ஒருபோதும் ஒடிக்க முடியாது அவற்றை.’
‘எதையுமே கொடுக்காதவரிடம் எதுவுமே இல்லை. மிகப் பெரும் துயரம் என்பது நேசிக்கப்படாமல் இருப்பது அல்ல; நேசிக்காமல் இருப்பது.’
‘நம் அன்புக்குரிய ஒருவரின் முகத்தில் ஆனந்தத்தின் ஒளியை ஓரு முறை பார்த்து விட்டால், தன்னைச் சுற்றி உள்ளவர்களின் முகங்களில் ஒளி ஏற்படுத்துவதை விட வேறு வேலை நமக்கு இல்லை என்பது புரிந்து விடும்.’
>><<